| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கிரிக்கெட் வீரர்...! நடிகர் சிவகார்த்திகேயன்...! குடும்பத்துடன் திடீர் விசிட்...!

by Vignesh Perumal on | 2026-06-09 01:42 PM

Share:


கிரிக்கெட் வீரர்...! நடிகர் சிவகார்த்திகேயன்...! குடும்பத்துடன் திடீர் விசிட்...!

திண்டுக்கல் மாவட்டம், ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குத் திரையுலக மற்றும் விளையாட்டுத் துறைப் பிரபலங்கள் அடுத்தடுத்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருவது ஆன்மீக அன்பர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் தனது குடும்பத்தினருடன் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, நேற்று பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும், தமிழகத்தின் பெருமையுமான டி. நடராஜன் இன்று காலை பழனி முருகன் கோவிலுக்குத் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.

அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் வின்ச் மூலமாக மலைக்கோவிலுக்குச் சென்று, முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். இவருடன் இவருடைய குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் உடன் வந்திருந்தனர். கிரிக்கெட் நட்சத்திரமான நடராஜனைப் பார்த்ததும், அங்கிருந்த சக பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். ரசிகர்களைப் பார்த்து இன்முகத்துடன் கைகாட்டிய நடராஜன், பாதுகாப்புடன் தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பினார்.

இன்று கிரிக்கெட் வீரர் நடராஜன் வந்துள்ள நிலையில், நேற்று (ஜூன் 8) தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சிவகார்த்திகேயன் பொதுவாகத் தனது புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்கும்போதோ அல்லது படம் வெற்றியடையும் போதோ முருகப்பெருமான் கோவில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது அவர் நடித்துவரும் 'சேயோன்' திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


பழனி மலைக்கோவிலுக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் அழகர்கோவில் 18-ஆம் படி கருப்பணசாமி கோவிலுக்குச் சென்று 5 அடி நீளமுள்ள அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்தி வழிபட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று பழனி மலைக்கோவிலுக்குத் தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து சீசன் ஓரளவு குறைந்துள்ள நிலையிலும், பழனி கோவிலுக்குப் பக்தர்கள் கூட்டம் சீராக வந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், அடுத்தடுத்த நாட்களில் வெள்ளித்திரை நட்சத்திரமான சிவகார்த்திகேயனும், கிரிக்கெட் நட்சத்திரமான நடராஜனும் பழனி முருகனைத் தரிசிக்க வந்திருப்பது மலைக்கோவில் வளாகத்தில் பெரும் சுவாரசியத்தையும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment