by Vignesh Perumal on | 2026-04-07 02:11 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அடிவாரம் பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் இளைஞரால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி பெரியநாயகி அம்மன் கோவில் கிரிவீதி பகுதியில் நடந்த இந்த துணிகரக் கொலைச் சம்பவம், பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (70) அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (30) நேற்று மாலை பழனி பெரியநாயகி அம்மன் கோவில் கிரிவீதி பகுதியில் ராஜமாணிக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபாகரன், அவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரபாகரன் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து ராஜமாணிக்கத்தின் தலையில் பலமாகத் தாக்கினார்.
கல்லால் தாக்கப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜமாணிக்கத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜமாணிக்கம், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், சார்பு ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ராஜமாணிக்கம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். தலைமறைவாக உள்ள பிரபாகரனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் எதற்காக முதியவரைத் தாக்கினார்? அவர்களுக்குள் முன்விரோதம் ஏதும் இருந்ததா? அல்லது போதை ஆசாமியின் செயலா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஆன்மீக பூமியான பழனியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த கிரிவீதி பகுதியிலேயே முதியவர் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!