by Vignesh Perumal on | 2026-01-27 01:13 PM
வழக்கமாகச் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், இன்று திண்டுக்கல்லில் விதிகளைப் பின்பற்றியவர்களுக்கு இனிப்புகளையும், வாழ்த்து அட்டைகளையும் வழங்கி அசத்தியுள்ளனர். திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் துறை மற்றும் தனியார் அமைப்பு ஒன்று இணைந்து இந்தச் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் வாணிவிலாஸ் பகுதியில் இன்று காலை இந்தத் திடீர் 'பாராட்டு' சோதனை நடைபெற்றது. நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில், சார்பு ஆய்வாளர் செல்வ ஹரிஹரசுதன் மற்றும் போக்குவரத்து போலீசார் இந்தப் பணியில் ஈடுபட்டனர். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனச் சோதனையின் போது, தலைக்கவசம் அணிந்து வந்தவர்களைப் போலீசார் வழிமறித்து, அபராதம் விதிக்காமல் அவர்களுக்கு இனிப்பு வழங்கி, "உங்கள் பாதுகாப்பு எங்கள் மகிழ்ச்சி" என்ற வாசகம் அடங்கிய வாழ்த்து அட்டையை வழங்கினர். சீட் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுநர்களுக்கும் இதே போன்ற பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. திடீரென போலீசார் வண்டியை நிறுத்தச் சொன்னதும் பதற்றமடைந்த வாகன ஓட்டிகள், கையில் இனிப்பைக் கொடுத்ததும் நெகிழ்ச்சியுடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
இது குறித்துப் பேசிய போக்குவரத்து ஆய்வாளர் பழனிச்சாமி, "விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. விதிகளை மதிப்பவர்களைப் பாராட்டுவதன் மூலம், மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். உயிரிழப்புகளைத் தடுக்கத் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் மிக அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்." திண்டுக்கல் போலீசாரின் இந்த ஆக்கப்பூர்வமான செயல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சட்டமன்றத் தேர்தல் தேதி? புதிய தகவல் !
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !