by Vignesh Perumal on | 2026-01-25 04:07 PM
2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு எனச் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது ஊழல் எதிர்ப்பு, கூட்டணி குறித்த நிலைப்பாடு மற்றும் தொண்டர்களுக்கான கட்டளைகள் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.
தனது நேர்மை குறித்துப் பேசிய விஜய், அரசியலில் ஊழலுக்குத் துளியும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
"எனக்கு எதற்குமே ஆசை இல்லை. என் திரையுலகப் பயணத்தில் மக்கள் எனக்கு உச்சமான இடத்தைக் கொடுத்துள்ளனர். என் குணம் என்றும் மாறாது; என்றுமே ஊழல் செய்ய மாட்டேன். என் ஆட்சியில் ஒரு துளி ஊழல் கறை கூட படியாது, படியவும் விடமாட்டேன். எனக்குப் பணத்தின் மேல் ஆசையே இல்லை, அது எனக்குத் தேவையும் இல்லை. என் கண் முன்னால் நடக்கும் ஊழலை எதிர்த்துக் கேட்கும் தைரியம் நம்மிடம் மட்டுமே உள்ளது."
கூட்டணி குறித்துப் பேசுகையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றை உதாரணமாகக் காட்டி ஒரு முக்கியச் செய்தியை விஜய் பதிவு செய்தார்.
வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் மற்றும் நட்பு சக்திகளின் உதவியுடன் போரிட்டு நாட்டை மீட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், "நம்முடைய தவெக படைக்கு நட்பு சக்திகள் (கூட்டணி) இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனியாக நின்று கெத்தாக ஜெயிக்கும் அளவிற்கு நமக்குப் பெரிய படை இருக்கிறது" எனத் தெரிவித்தார். இது 2026-ல் தவெக தனித்துப் போட்டியிடவும் தயாராக இருப்பதைக் குறிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் வைத்து விஜய் விமர்சித்தார்.
மற்ற கட்சிகளுக்கு 'பூத்' (Booth) என்பது கள்ள ஓட்டுப் போடும் இடம். ஆனால் நமக்கு அது ஜனநாயகக் கூடம். வாக்குகளைத் திருடாமல் பாதுகாக்க வேண்டும்.
முன்னாள் ஆண்ட அதிமுக நேரடியாகவும், ஆளும் திமுக மறைமுகமாகவும் மற்றவர்களிடம் 'சரண்டர்' ஆகிவிட்டன. அதனால்தான் இப்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்."
தொண்டர்களை 'தளபதிகள்' என விளித்துப் பேசிய விஜய், அவர்களுக்கு ஒரு கட்டளையையும் பிறப்பித்தார்.
"என் மீதான அன்பு உண்மை என்றால், அதை உழைப்பில் காட்டுங்கள். இது வெறும் தேர்தல் கிடையாது, இது ஒரு ஜனநாயகப் போர். அந்தப் போரை வழிநடத்தப் போகும் தளபதிகள் நீங்கள் தான். ஒவ்வொரு ஓட்டும் தவெக-வுக்குத் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்."
கட்சியினரிடையே ஒற்றுமை மிக அவசியம் என்பதை வலியுறுத்தி, விஜய் மேடையிலேயே கைகூப்பிக் கேட்டுக்கொண்டார்.
"மக்கள் என் மேல் மட்டும் நம்பிக்கை வைத்தால் போதாது; என்னோடு பயணிக்கும் உங்கள் ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து உழைத்து வெற்றி பெற வேண்டும். இதை நான் உங்களிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். யாருக்காகவும், எதற்காகவும் அரசியல் சமரசம் செய்யவே கூடாது."
கூட்டத்தின் இறுதியில் 2026 தேர்தலில் உண்மையாக, சத்தியமாக, உறுதியாக உழைப்போம் என அனைவரையும் நிற்க வைத்து விஜய் உறுதிமொழி ஏற்கச் செய்தார். சினிமா புகழைத் தாண்டி, ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராகத் தனது கொள்கை மற்றும் நேர்மையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இவ்வளவு செலவா? அறநிலையத்துறைக்கு அண்ணாமலை கண்டனம் !
சட்டமன்றத் தேர்தல் தேதி? புதிய தகவல் !
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!