by Vignesh Perumal on | 2025-12-28 06:16 PM
கரூர் மாவட்டத்தில் சாதி ரீதியான காரணங்களைக் கூறி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சமையல் உதவியாளரைப் பணியிலிருந்து நீக்கிய புகாரின் அடிப்படையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார மேலாளர் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி நிரோஷா (35). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 16-ம் தேதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுமதி, நிரோஷாவிடம் சாதிய ரீதியான உள்நோக்கத்துடன் பேசியதாகக் கூறப்படுகிறது."நீங்கள் சமையல் செய்வதால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது. அதனால் நீங்கள் வேலையை விட்டுவிடுங்கள்" என்று அவர் கூறியதாக நிரோஷா குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தோகைமலை ஊராட்சி ஒன்றிய மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்யா, நிரோஷாவை அப்பணியிலிருந்து நீக்கம் செய்துவிட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமித்துள்ளார்.தனக்கு நேர்ந்த அநீதி குறித்து நிரோஷா கடந்த 18-ம் தேதி தோகைமலை காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், இது சாதி ரீதியான பாகுபாடு என்பதை உறுதி செய்தனர்.இதனையடுத்து, பானுமதி மற்றும் சத்யா (வட்டார இயக்க மேலாளர்) ஆகிய இருவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அரசுப் பள்ளியில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த இந்தப் புகார் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் கல்வித் துறை அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு சாதிப் பாகுபாடற்ற கல்விச் சூழலை வலியுறுத்தி வரும் நிலையில், ஒரு அரசுப் பள்ளியிலேயே இத்தகைய சம்பவம் நடந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!