by Vignesh Perumal on | 2025-12-28 11:21 AM
கன்னியாகுமரி நகராட்சியில் நூற்றுக்கணக்கான ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களது உழைப்பில் சேமிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து நாகர்கோவிலில் உள்ள பி.எஃப் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கன்னியாகுமரி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் இ.பி.எஃப் (EPF) தொகையை, அவசரத் தேவைகளுக்காக எடுக்க முயன்றபோது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டால், "இதை எங்களிடம் கேட்காதீர்கள், பழைய ஒப்பந்த நிறுவனத்திடம் போய் கேளுங்கள்" என அதிகாரிகள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாகப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் சம்பளம் தாமதமானதற்காகப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மற்றும் திமுக கவுன்சிலர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அடுத்த நாளிலேயே சம்பளம் பெற்றுத் தரப்பட்டதுடன், "பழைய ஒப்பந்த நிறுவனம் வேண்டாம்" என்று பணியாளர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டது.
அன்று அதிரடியாகச் செயல்பட்டு ஒப்பந்தத்தை மாற்றிய கவுன்சிலர்கள், இன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஃப் பணத்தை மீட்டுத் தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது பணியாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது. "சம்பளப் பிரச்சினையில் காட்டிய வேகத்தை, எங்கள் சேமிப்புப் பணத்தை மீட்பதில் ஏன் காட்டவில்லை?" எனப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தங்களது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் குடும்பத் தேவைகளுக்குப் பணமின்றி தவித்து வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தகட்டமாகப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். விரைவில் நாகர்கோவிலில் உள்ள மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
"நாங்கள் இரவும் பகலும் உழைத்துச் சேமித்த பணம் எங்களுக்குக் கிடைக்காமல் போவது அநீதி" எனப் புலம்பும் பணியாளர்கள், இந்த விவகாரத்தில் மாநில நகராட்சி ஆணையர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து உரியத் தரவுகளைப் பெற்று, பணியாளர்களின் கணக்கில் பி.எஃப் தொகை முறையாகச் சேருவதையும், அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியைச் சுத்தமாக வைக்கும் தூய்மைப் பணியாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!