by aadhavan on | 2026-04-09 01:22 PM
பங்குனி திருவிழாவில், அலங்காரத்தில் திரிசூல காளியம்மன்.
» மு. ஆதவன்
தேனி மாவட்டம் கூடலூர் திரிசூல காளியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலக்கூடலூர் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் காளியம்மன், சிலை வடிவில் இல்லாமல் திரிசூல வடிவில் அருள்புரிகிறாள். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று அம்பிகையின் வடிவமாக இங்கு காளியம்மன் அருள் அளிப்பதாக ஐதிகம். விழா காலங்களில் மட்டும் திரிசூலத்திற்கு அம்பாள் வடிவில் அலங்காரம் செய்யப்படும். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா, வெகு விமர்சையாக நடைபெறும்.
கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி, முளைப்பாரிக்கு தானியங்கள் இட்டு, பயிறு பாவும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தினமும் மாலை வேளையில் பெண்கள் முளைப்பாரி முன்பு, கும்மி அடித்து அதனை அம்பிகையாக பாவித்து வளர்த்தனர்.
நேற்று முன்தினம், செவ்வாயன்று புனித நல்ல தண்ணீர் தீர்த்தமான ராஜா கிணற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து கரகம் ஜோடிக்கப்பட்டது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட காளியம்மன், ஊர்வலமாக வெள்ளாளர் சமுதாய மண்டபத்தில் உள்ள கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது.
பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று மெய்த்தலை மன்னாடி குளத்தில் கரைத்தனர். அவர்களுக்கு சங்கத்தினர் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
••••••••••
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!